பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 29, 2011

துளசி டீச்சர் பதிவை திருடிட்டாங்க!





(படம் நன்றி: பித்தனின் வாக்கு சர்வம் சிவமயம் வலைப்பூ)

துளசி டீச்சர் கூடவா இப்படி செய்வாங்க? என ஆச்சர்யத்துடன் வந்து படிக்கும் கனவான்களே முழுசா படிங்க. பின்ன தான் புரியும் துளசி டீச்சரின் பதிவை யாரோ திருடிட்டாங்கன்னு:-))

நான் கிட்டத்தட்ட இந்தியாவில் எல்லா இடமும் போயிருக்கேன். அது போல முழு வளைகுடாவும் சுற்றி இருக்கேன். ஆனால் எங்கே எங்கே போனேன். எப்படிப்போனேன் யார் என் கூட வந்தாங்க. அதன் நினைவுகள் என்ன? போன இடத்தின் சிறப்பு என்ன? என எதுவுமே தெரியாது. ஏனனில் எதையுமே ஆவணப்படுத்த ஒரு டைரி கூட எழுதி வைத்துக்கொண்டது கிடையாது.

ஆனால் நம்ம துளசி டீச்சர் தன் வீடு கட்டுவது முதல் தான் சென்று வந்த இடங்கள் வரை புகைப்படங்களோடு அந்த இடத்தின் சிறப்புகள், அங்கே வசிக்கும் தமிழர்கள், தமிழ்சங்கம், போன்ற அனைத்து விபரங்களோடும் நகைச்சுவையோடு படிக்க சுவாரஸ்யமாக நமக்கு தரும் பாங்கே தனி அழகு தான். அதே இடங்களுக்கு நாம் சென்று வந்திருந்தால் 'அட டே அந்த இடம் இப்போ இப்படியா மாறிப்போச்சு?" என மனதில் நினைத்து கொண்டு அன்றைய துளசி டீச்சரின் பதிவை வைத்து அதில் இருக்கும் புகைப்படங்கள் வைத்து 'அப்டேட்" செய்து கொள்கின்றோம். போகாத் இடமாக இருந்தால் அந்த இடங்கள் பற்றி ஏற்கனவே இருந்த ஒரு மாயை கற்பனையை அழித்து விட்டு அந்த உண்மையான நிலையை பதிந்து கொள்கின்றோம். (நான் கூட பல வருடங்கள் சென்னை என்றாலே வடிவேலு நடித்த சொர்க்கலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வருவது போல சொர்கம் மாதிரியாகத்தான் நினைத்து கொண்டிருந்தேன் என்பது பதிவோடு சம்மந்தப்படாத விஷயம்)

விஷயம் அதுவல்ல. ரொம்ப சிம்பிள். ஆயிரம் பதிவு கண்ட அந்த அபூர்வ துளசி டீச்சர் தன் பயண அனுபவங்கள் குறித்து புத்தங்கள் கூட எழுதி பிரபலம் ஆனவர். அந்த பிரபல பதிவரின் பதிவையே பித்தன் என்பவர் அப்பட்டமாக காபி அடித்து அவர் பதிவு போலவே வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயலாகும். இதோ அந்த பதிவின் சுட்டி.

இப்படி செய்யும் போது சம்மந்தப்பட்ட பதிவரிடம் அதற்கான அனுமதியை பெறவில்லை என்பது அந்த பதிவில் டீச்சரின் பின்னூட்டம் வாயிலாக அறிய முடிகின்றது. அந்த பின்னூட்டத்திலே அவரது மன வலியும் உணரப்படுகின்றது. திருடியவருக்கு அன்றைக்கான சந்தோஷம். சும்மா கிடைத்தது தானே என அந்த திருடப்பட்ட பொருளின் அருமையை கூட தெரியாமல் பயன் படுத்துவர். ஆனால் உழைத்து உழைத்து அதை உண்டாக்கியவனின் வலி இருக்கின்றதே, அந்த வலி உணர்ந்தால் மட்டுமே புரியும். எனக்கு தெரிந்து ஒரு திருடன் கதை பாட்டி சொன்ன கதை, ஒரு திருடன் எங்கேயோ ஒரு வைரக்கல்லை திருடி வந்து விட்டான். அவன் வீட்டில் மின்சாரம் கிடையாது. அது ஒரு விலை மதிப்பு இல்லா வைரம் என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. அவன் வீட்டில் ஒரு கழிவறை உண்டு கொல்லை கடைசியில். இருட்டில் அங்கே செல்லும் போது கால் தடுக்கி விழாமல் இருக்க அந்த வைரத்தை அங்கே கழிவறையில் கால் வைக்கும் இடத்தில் புதைத்து வைத்தான். அதன் வெளிச்சத்தில் தடுக்கி விழாமல் இருந்தான். அவனுக்கு என்ன? எவன் வீட்டு வைரமோ. சும்மா கிடைச்சுது. அதை கழிவறையில் வைத்தால் அவனுக்கு என்ன? ஆனால் உழைத்து சம்பாதித்தவன் அதே அந்த வைரத்தை அங்கேயா வைப்பான்? அதே கதை தான் இங்கேயும். தான் கஷ்டப்பட்டு உழைத்த அந்த பதிவு நாம் சிலாகித்து படித்த அந்த பதிவு இப்போது அந்த பித்தன் என்பவரின் வலைப்பூவில். இதை எல்லாம் கண்டிக்க வேண்டும்.

ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த மாதிரி பதிவு திருட்டுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? புதிதாக பதிவு எழுத வருபவர்கள், முதலில் வலைப்பூ, அதை எப்படி எழுதுவது என்றெல்லாம் தெரிந்து வைத்து கொண்டவுடன் "தன்னை தவிர இந்த உலகில் இப்படி ஒரு விஷயம் யாருக்கும் தெரியாது" என நினைத்து கொள்வது தான் முதல் தவறு. நீங்கள் சத்தமாக வாயுபிரித்தால் கூட சக பதிவருக்கு தெரிந்து இணையத்தில் செய்தியாக வந்து விடும் அளவு உலகம் மிகச்சிறியது என அவர்களுக்கு புரிவதே இல்லை. அந்த பித்தனின் பதிவில் சென்று உங்கள் "அட்வைசை" இலவசமாக பொழியுங்கள். நீங்க கொடுக்கும் இலவச அட்வைஸால " இனி நான் பதிவு திருட்டு செய்யவே மாட்டேன் போ" என கோவிச்சுகிட்டு அந்த ஆள் போகனும். நம் துளசி டீச்சருக்கு : டீச்சர் கூல்... கூல்.. இப்பவாவது புரிஞ்சுகுங்க. நீங்க ஒரு தலை சிறந்த சூப்பர் ஸ்பெஷல் பதிவர் என. எங்களை எல்லாம் திருட கூட யாரும் வர மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க. என்ன ஒரு அழிச்சாடியம் அந்த திருடர்களுக்கு? எங்க பதிவுகள் அத்தனை ஒரு கேவலமா போச்சா?

April 22, 2011

கழுத்து வலிக்கும் அளவுக்கு திரும்பிப் பார்க்கிறேன்!!!

மேட்டரே இல்லாட்டி இப்படித்தான். பையன் எல் கே ஜி படித்து முடித்தமைக்கு எல்லாம் திரும்பிப்பார்க்கிறேன் என நெஞ்சுக்கு நீதி தான் எழுதிகிட்டு இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையோடு ஆரம்பிக்கிறேன்:-)) நட்ராஜ் ஸ்கூல் போக ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஓடினதே தெரியவில்லை. போன வருஷம் ஸ்கூல் ஆரம்பித்த தினத்தில் சம, பேத, தான எல்லாம் நான் பயன்படுத்தியும் அவன் தண்டத்தை எதிர் பிரயோகம் செய்தும் ஒரு வழியாக ஒரு வாரத்தில் "இது தனக்கான விதி. அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். இதுவும் கடந்து போகும்" என அவனே அவனை சமாதானப்படுத்திக்கொண்டு இரு தரப்பும் ஒரு விதமாக ஒத்துப்போய் பின்னர் அவன் வகுப்பில் இருந்த கல்யாணி முதல் ஷிபாயா வரையிலான நண்பர்களோடு நட்பாகி பின்னர் ஞாயிற்று கிழமை கூட ஸ்கூல் போக வேண்டும் என்கிற அளவுக்கு அந்த நட்புகள் வளர்ந்து... ஸ்கூல் இருக்காது என நான் அங்கே கொண்டு போய் காட்ட வேண்டிய நிலைக்கு வந்த பின்னரும் "இத்தனை தூரம் வந்துட்டோம் அப்படியே ஒரு எட்டு ஷிபாயா வீட்டுக்கு போய் வந்துடலாமே" என அவன் கேட்க எனக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.நானெல்லாம் அந்த வயதில் அத்தனை உக்கிரமாய் இல்லை.

முதல் மிட் டேர்ம் டெஸ்டில் மார்க் கம்மியாகவும் ரேங் அதிகமாகவும் எடுத்த அவன் இப்போது முமுப்பரிட்சையில் மார்க் அதிகமாகவும் ரேங் கம்மியாகவும் எடுக்கும் அளவு தலைகீழ் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இடைப்பட்ட இந்த பத்து மாத காலத்தில் சில பல சண்டைகள், ஓரிடண்டு தடவை ரத்தகளரி, ஹெட்மிசஸ் பஞ்சாயத்து என போனாலும் எந்த ஆட்டத்திலும் என்னை அவர்கள் சேர்த்துக்கொண்டதே இல்லை. ஒரு முறை ஒரு பையனை சிலேட்டால் மண்டையை கொத்தி லைட்டா அரைச்சேர் ரத்தம் வந்து விட அது ஹெட்மிசஸ் வரை பஞ்சாயத்துக்கு போய் நான் மதியம் அவனை அழைக்க வரும் போது அவனை ஹெட்மிசஸ் ருமில் நடுவே வைத்து "என்ன கைய பிடிச்சு இழுத்தியா" வடிவேலு கணக்கா நிற்க வைத்திருக்க நான் போன போது ஒரு பி டி வாத்தியார் கிட்டே நான் போய் மெதுவா என்னா சார் மேட்டரு என விசாரிக்க அவர் காதோடு வந்து "லேடீஸ் மேட்டர் சார். கல்யாணி கிட்டே இந்த சுரேஷ் பேசிட்டான் போலிருக்கு. அதனால இவன் சிலேட்டால கொத்திட்டான்" என காதோரம் சொல்ல எனக்கு பகீர்ன்னு இருந்துச்சு.

என் பையன் மேல பழிபோடும் இந்த வாத்திக்கு முட்டை மந்திரம் வைக்கலாமா, எதுனா நாயர், நம்பூதிரின்னு கான்சல்ட் பண்ணி பொம்மையில் ஊசி குத்தலாமா எனவெல்லாம் யோசித்து அதல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என நினைத்து நம்ம ரேஞ்சுக்கு அக்னிநட்சத்திரம் கார்திக் பிரபு மாதிரி தினமும் காலை சாப்பாட்டுக்கு முன்பு ஒரு தடவையும் மதிய சாப்பாட்டுக்கு பின்பு ஒரு தடவையும் தோள்பட்டையால் மோதுவது என தீர்மானத்துக்கு வந்து அடுத்த நாள் அதை செயல்படுத்திய வேகத்தில் என் சட்டை பேண்ட் எல்லாம் சேரும் சகதியுமான காரணத்தால் அதையும் விடுத்து தூரக்க இருந்தே கண்ணால் முறைத்துக் கொண்டு இந்த வருஷ கடைசியில் என் கண் என் வாய் சைசுக்கு பெரியதாக ஆனது தான் இந்த வருஷம் கண்ட அதிகபட்ச பலன்.

வருஷ கடைசியில் ஒரு நாள் என்னிடம் வந்து " அப்பா ஒரு 500 ரூபா சேஞ்சா இருந்தா குடேன்" என அவன் கேட்க அதிர்ந்தேன் .லைட்டா. சேஞ்சே 500 ரூவாயா என நினைத்து கொண்டே எதற்கு என கேட்க "ஸ்போர்ட்ஸ் டே"யில் ஒரு ஈவண்ட்ல கலந்து இருக்கேன். அதுக்கு வெள்ளை கலர் டிராயர், சட்டை, ஷூ , சாக்ஸ் எல்லாம் தருவாங்க. அதுக்குத்தான்" என சொன்னான். எனக்கு தெரிந்து வெள்ளை யூனிஃபாம்ல விளையாடும் விளையாட்டு அரசியல் மட்டும் தான். சரி நம்ம பையன் டென்னிஸ்ல கலக்க போறான் போலிருக்கு. போகட்டும். இப்பவே டென்னிஸ் எல்லாம் விளையாடினா பிற்காலத்தில் மகேஷ்பூபதி போல ஆடினா ஒன்னுக்கு ஐந்து மருமகளா கிடைக்கும். வீட்டுல குத்து விளக்கில் ஆளுக்கு ஒரு முகமா ஏத்தலாமே என சந்தோஷமாக கொடுத்தேன்.

ஸ்போர்ட்ஸ் டே அன்று காலை ஆறு மணிக்கே எழுந்து அவன் அம்மாவோடு போய்விட்டான். பிராக்டிஸ் எல்லாம் இருக்குதுன்னு. நாம் மெதுவாக எழுந்து ஒரு ஒன்பது மணிக்கு ஸ்கூல் பக்கம் போனேன். வாசலில் நின்னு வாங்க வாங்க வெல்கம் வெல்கம் என கூப்பிட்டு கொண்டே பன்னீர் தெளித்தான். வலது பக்கம் ஐந்து பையன்கள் எல்லாரும் இவன் சைஸ்ல. இடது பக்கம் ஐந்து பெண் குழந்தைகள். எல்லாருமே பாரதிராஜா குரூப் டான்சர் மாதிரி வெள்ளை கலரில். அடப்பாவமே என்னிடம் 500 வாங்கிட்டு இங்க வந்து "வாங்கோ மாமி" வேலை பார்க்கிறானே. இதுக்கு பள்ளிக்கு எதிரே இருக்கும் அனுக்ரஹா மண்டபத்துக்கு போய் "வாங்கோ மாமி, காபி சாப்டேளா? டிபன் சாப்டேளா?"ன்னு கேட்டாலாவது திரும்பி வரும் போது அவங்க பாக்கெட்ல 500 வச்சு அனுப்பியிருப்பாங்க.500 ரூபாய் கொடுத்துட்டு குத்து விளக்கில் ஐந்து முகத்துக்கும் முகத்துக்கு ஒன்றாக ஐந்து மருமகள் எதிர்பார்த்தது எல்லாம் கொஞ்சம் ஓவர் தானோ? கடவுள் கபால் கபால்ன்னு மண்டையிலே அடிக்கிறான் இப்பல்லாம்.பரிசு கூட கொடுத்தாங்க. ஒரு எவர்சில்வர் சோப்பு டப்பா. ஆக 500 ரூபாய்க்கு ஒரு சோப்பு டப்பா. ஹும்...

நான் அந்த அக்னிநட்சத்திர பிரபு பி டி சாரை கேட்டேன். "என்ன சார் எதுனா ஓட்ட பந்தயத்துல இவனை ஓட வச்சு கலந்துக்க வச்சிருக்க கூடாதா'ன்னு. அதக்கு அவர் " சார் அவன் செலக்ஷன்ல டார்கெட்டை ரீச் பண்னலை சார். ஐந்தாவதா வந்தான்" என சொன்னார். அதுக்கு நான் "இல்லியே நல்லா ஓடுவானே சார். நீங்க எதுக்கும் க்ளாஸ் ரூம்ல இருந்து ஸ்கூல் கேட் தான் டார்கெட்ன்னு சொல்லிப்பாருங்க" என்றேன். இன்றைக்கு அவர் முறைத்தார். அப்பாடி இந்த ஒரு வருஷமா நான் முறைத்ததுக்கு அன்றைக்கு தான் அவரும் முறைத்தார். சந்தோஷம்.

மொத்தத்தில் இந்த வருஷ நட்ராஜ் படிப்பினாலே நான் தெரிந்து கொண்டது ஒரு ஆங்கில ரைம்ஸ் தான். எனக்கெல்லாம் 3ம்பு படிக்கும் போது தான் ரைம்ஸ். மொத்தமே நாலுதான். பாபா பிளாக் ஷீப் எல்லாம் பெருசா(?) இருந்ததால் எனக்கு அந்த "ஆக்ராஸ் பன்னு ஆக்ராஸ் பன்னு ஒன்னே பெண்ணே டூயே பெண்ணே ஆக்ராஸ் பன்னு" என குருட்டாம் போக்கில் படித்த முதல் ஆங்கில ரைம்ஸ் தப்பு என இப்போது தான் தெரிந்து கொண்டேன். அது அப்படி இல்லையாம். hot cross buns, hot cross buns, one a penny, two a penny, hot cross buns, if you have no daughters, give them to your sons. one a penny two a penny hot cross buns" இப்படியாக இருக்கு அந்த ரைம்ஸ். ரொம்ப தப்பு தப்பா படிச்சுட்டனோ?

அது போல அவன் தமிழ் ரைம்ஸ்ல
"நான் தான் குழந்தை வேலன்
நாய் தான் எனக்கு தோழன்
என்னை விட்டு நீங்காது
எப்போதுமே தூங்காது
முரடன் வந்தால் கடிக்கும்
திருடன் வந்தால் பிடிக்கும்"

என்ற ரைம்ஸ் படிச்சுட்டு என்னிடம் அவன் "அப்பா வேலன்னா நம்ம அண்ணாச்சியா?"ன்னு கேட்க அவன் ரைம்ஸ் எதையும் கவனிக்காத நான் "ஆமாம்டா வேலன் அண்ணாச்சி தான். நான் தான் அவருக்கு தோழன் தெரியுமா?" என கேட்க அபி இடி இடி என சிரிக்க என்னவோ உள்குத்து இருக்கு போலிருக்கே என நினைத்து பின்னர் தான் அந்த பாடலை படிக்க சொல்லி கேட்டேன். ச்சே... இப்படித்தான் எப்போதும் நானே வாயை குடுத்து வாங்கிகட்டிக்கிறேன். இனி ஜாக்கிரதையா இருக்கனும்:-))

ஆக இப்படியாக ஒரு வருஷம் முடிந்தது. பள்ளி முடிந்த நாள் அழைத்து வரும் போது "தம்பி இப்ப எல் கே ஜி - சி படிச்சு முடிச்சுட்ட. அடுத்த வருஷம் என்ன படிக்க போறே"ன்னு கேட்டேன். படார்ன்னு பதில் சொன்னான். எல் கே ஜி - டி... ரைட்டு....

April 14, 2011

ராகுல்காந்தியின் இளைஞர் காங்கிரஸ் பாசறை திரும்பியது!


போர் போர் போர் என எக்காளமிட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் 15 லட்சம் பேர் இருக்கும் இளைஞர் காங்கிரசில் ராகுல் அவர்களுது கோஷ்டியில் இருந்த 15 லட்சம் பேரும் மெடிக்கல் லீவ் எடுத்துக்கொண்டு "காசாவது டேஷாவது" என வீர முழக்கம் இட்டு தன் தனது கட்சிக்கு சென்ற பின்னர்.... பின்னர்... பின்னர்... எனது மயிலாடுதுறை தம்பிக்கு நல்லான் பட்டினம் வாக்கு சாவடியில் ஒரு ஒரே ஒரு பூத் ஏஜண்ட் கூட இல்லைங்கோஓஓஓஓஒ....

இத்தனைக்கும் அந்த தொகுதி கடந்த 1947 முதலே பதட்டமான வாக்குச்சாவடின்னு பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பவும் தான். பூத்தின் இரண்டு பக்கமும் 200 அடி தூரத்துக்கு யாரும் வாக்கு சேகரிக்க கூடாது. சரி. ஆனா அதுக்காக 400, 800 அடி வரை எவனுமே இல்லை. ஏன்னா அங்க காங்கிரஸ் போட்டியிடுது.சரி அதுக்காக ஒரு பூத் ஏஜண்ட் கூடவா இருக்க மாட்டான்? சம்பத் முதல் அத்தனை திமுக காரனும் இருந்தான். அந்த பக்கம் பார்த்தால் தேமுதிக இல்லை. எவனுமே இல்லை. ஒன்லி பூத் ஏஜண்டாக தீவாளி என்கிற அதிமுக காரன் மட்டுமே. என்னடா தேர்தல் இது.

இதோ குடந்தை வேட்பாளர் இரண்டு பேருமே "குடந்தையை தலைநகராக்குவோம்" என சூளுரைத்து ஓட்டு வேட்டை ஆடும் நேரத்தில் இவன் எங்க வேட்பாளர் அழகா தேமுதிகவை விலைக்கு வாங்கி ஜெயிக்க போவதா ஒரே பேச்சு.

ஆனா மாயவரம் தலைநகரா ஆகாதா? பஸ்டாண்டு வராதா? பாதாள சாக்கடை அவுட்டு தானா? போங்கடா நீங்களும் உங்க அரசியலும்... மாயவரத்தில் நிற்கும் கோவி சேதுராமன் என்னும் பாஜக கட்சி வேட்பாளர் சொன்னாரு. மாயவரத்தை மாவட்ட தலைநகராக்குவேன் என. நான் ஓட்டு போட கிளம்பும் முன் ஸ்பீடா போன ஒரு குலாம் (காங்) சொன்னான். "அண்ணே தைரியமா போங்க, நம்ம ஆட்சி தான். ராஜ்குமாரு காசை அடிச்சு மினிஸ்டர் ஆகிடுவாரு" ... நான் போய் அதே கடுப்புடன் ஓட்டு போட்டேன்....யாருக்கு???????????

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

275x 234 = இப்புடீன்னு எல்லாம் கணக்கு போட்டா கூட 51000 பேர் தான் ஆகும் பூத் ஏஜண்ட்க்கு. ஆனாலும் ராகுலின் இளைஞர் காங்கிரசால் அதை கூட செய்ய முடியாட்டி அது இருந்தா என்ன அதை பெத்த ராகுல் வயித்துல பிரண்டை வச்சு கட்டினா என்ன?

*********************************

கரூர் ஜோதிமணின்னு ஒரு பொண்ணு. பாவமா இருக்கு அதை பார்த்தா. அதுக்கு விலாசமே ராகுல் தான். ராகுல் இல்லாட்டி அதுக்கு சீட் கிடைச்சிருக்காது. போவட்டும். அதல்லாம் தப்பே இல்லை. ஏதோ புத்திசாலித்தனம் டெஸ்ட்டுல தமிழ்நாட்டு லெவல்ல முதல் ரேங்கா வந்துச்சாம். போவட்டும் அதும் தப்பே இல்லை. அது ஒரு கடுதாசி போடுது. யாருக்கு? சீமானுக்கு. வக்காலி அவன் விடுவானா? இதாண்டா சாக்குன்னு வச்சு அதை தாளிச்சு தள்ளிட்டான். அதாவது அது லெட்டரு லொட்டரு போட்டிருக்காம். " அண்ணே அண்னே சிப்பாய் அண்ணே, எங்க ஊரு நல்ல ஊரு ... நீங்க வந்து பிரச்சாரம் பண்ணதீங்க அண்ணே"

ச்சே... சே சே அந்த சீமான் வறுத்து எடுப்பதே ராகுலையும் அவனை பெற்றெடுத்த தாயையும் தான். அந்த ராகுலின் நேரிடை சிஷ்யை ஜோதிமணி விடுத்த கடிதம் பாருங்க இப்படியாக. அந்த கடிதத்தை படிச்சு படிச்சு அவன் கிழிக்கிறான். தான் ஒரு இயக்கத்தில் இருக்கிறோம். அதன் தலைவரை முழுமையாக நம்புகிறோம் என்கிற பட்சத்தில் " வாடா வா மொவனே சீமானே, உன்னை முறத்தால் அடித்து துரத்துகிறேன்" என நீ சொல்லியிருந்தா நீ தமிழச்சி. அதை விடுத்து கடிதம் அனுப்பினா அவன் வந்து சொல்றான்.. "தங்கச்சி, நீ இருக்கும் இடம் சரியில்லை. இப்பவே வெளியே வா.. நான் உன்னை ஜெயிக்க வைக்கிறேன்" ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தூஊஊஊஊஊஊஊஊ.. இதுக்கு தாராளமா சந்தோஷமா தோத்துட்டு போலாமே தங்கச்சி ஜோதிமணி!

இன்னும் கேவலமாக வாயில் வருது. வேண்டாம் விட்டு விடுகிறேன். போகட்டும். தலைப்புக்கு வந்து தொலைகிறேன். ராகுலின் இளைஞர் பாசறை எல்லாம் தன் தனது பாசறைக்கு அதாவது இளைஞர் காங்கிரசுக்கு திரும்புகிறது எங்கள் பகுதியில். கேட்டேன். நாங்க தான் ராஜகுமாரை ஜெயிக்க வச்சோம்னு கல்லா கட்டுவோம் பாருங்க அண்ணே என குதூகலமாக சொன்னாங்க. இனி ஆறு மாதம் கழித்து தான் தாய்வீடு திரும்புவாங்க. ஏன்னா உள்ளாட்சி தேர்தல் இருக்குதே:-))

April 11, 2011

திமுக வெற்றிக் கோட்டை தொட்டது எப்படி???


ஒரு பூரணம் என்று சொல்வார்களே, ஒரு முழுமை என்று சொல்வார்களே, ஒரு பௌர்ணமி என்று சொல்வார்களே, அது போல ஒரு ஒரு நிலையில் இருக்கின்றோம் இப்போது. மே மாதம் 2011ல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் என்று நினைத்தோம். ஆனால் முன்கூட்டியே வந்தது. ஏப்ரல் 13 அன்று தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. எல்லோரும் சொல்லிப்பார்த்தார்கள். அதற்கு அடுத்த நாள் பொது விடுமுறை வருகின்றது. பலரும் பழைய நினைவிலே அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடுவர், சிரமமாய் இருக்கும் என சொல்லியும், +2 , 10 வது பொது தேர்வுகள் நேரம் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தும் தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை.

போகட்டும் என எதிர் கொண்டோம் அதையும். பின்னர் யார் யார் நம்முடன் கூட்டணி என்ற பிரச்சனை. பாமகவை கொண்டு வந்தோம். அதன் முன்னர் பிப்ரவரி முதல் தேதி கலைஞர் டெல்லி பயணம். எத்தனை தொகுதி என பேசி முடிக்கப்படும் என நினைத்தோம். முதல்வர் மாநாடு முடிந்ததும் சோனியா அம்மையாரை, பிரதமரை சந்திக்க முடிந்த போதும் காங்கிரசில் ஐவர் குழு தான் அணைத்தையும் முடிவு செய்யும் என கூறப்பட்டது. பிரச்சனை. சந்திப்பு முன்னர் பாமக எங்களோடு உண்டு என சொன்னார் கலைஞர். மருத்துவர் இல்லை என்றார். அடுத்த பிரச்சனை.அடுத்த நாள் திமுகவின் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த ராசா கைது. பத்திரிக்கைகள் கொக்கரித்தன. திமுக அழிந்து விட்டதாக அறிவிப்பு செய்தன.பிரச்சனை. பின்னர் ஐவர் குழு அமைக்க தாமதம் ஆனது. இதனிடையில் காங்கிரசில் ஒரு சாரார் பாதிக்கும் மேல் தொகுதிகள் ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என ஆரம்பிக்க இதை எல்லாம் ஜுனியர் விகடனும், ரிப்போர்டரும், தினமலரும், தினமணியும் கடந்த சில ஆண்டுகளாக கூட்டணியை உடைக்கும் முயற்சியின் உச்சகட்ட போராட்டத்தை தொடங்கின. இது அதற்கடுத்த பிரச்சனை.

பின்னர் பாமக கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டது. அதே நேரம் காங்கிரஸ் ஐவர் குழு அமைக்கப்பட்டு அதிலே இளங்கோவன் இல்லை என சத்தியமூர்த்தி பவன் அல்லோகலப்பட்டது. இங்கே பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனிடையே தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணியில் சேருமா எது சேரும் எது ஒதுக்கப்படும் என சரியாக தெரியாத நிலை உண்டானது. ஏனனில் திமுக காங்கிரசை கைகழுவினால் அதை இரு கரம் நீட்டி வரவேற்க அதிமுக தயாராக இருந்தது. அதன் காரனமாகவே தேமுதிகவுக்கு சீட் எண்ணிக்கை இத்தனை என சொல்ல முடியாத நிலை அதிமுகவுக்கு. இங்கே காங்கிரசுடன் பேச்சு வார்த்தை இழுபறியாகவே இருந்தது. அதிமுக இன்னமும் காங்கிரசுக்கு கதவு திறந்து இருந்தது. உடனே தேமுதிகவை அந்த பக்கம் தள்ளிவிட "மானம் உள்ளவர், ரோசக்காரர் அந்த பக்கம் போகமாட்டார் " என அஞ்சாநெஞ்சன் ஒரு பேட்டி கொடுத்து அங்கே தள்ளிவிட்டார். அன்றே 41 வாங்கி கொண்டு அது அங்கே அடக்கமாகியது. இங்கே அதற்குள் விடுதலை சிறுத்தைகளுக்கு பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் இன்னும் இங்கே முரண்டு பிடித்து கொண்டு தான் இருந்தது.

பின்னர் காங்கிரஸ் ஐவர் குழு எல்லாம் டெல்லி போய் அது சுறுங்கி ஒருவர் குழுவாக குலாம்நபி ஆசாத் இங்கே வந்தார். அதற்குள் முஸ்லீம் லீக், மூமுக ஆகியவற்றுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸின் குலாம் வந்து பேசும் போது அந்த 110 என்பது குறைந்து கார்திக் சிதம்பர பார்முலா 72க்கு வந்து பின்னர் 63க்கு வந்து அதும் முடியாமல் குலாம் திரும்பி போக அதே நேரம் கொமுகவுக்கு 7 சீட் கொடுக்கப்பட்டு கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நேரத்தில் அந்த நடுநிலை நாளேடுகள், வாரமிருமுறை ஏடுகள் கொட்டம் அடக்க முடியா குதிரையாக திமிறிக்கொண்டு அலைந்தன. பின்னர் திமுகவின் ராஜினாமா முடிவு, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உடன்பாடு 63 சீட்டுகள் என ஒரு வழியாக எங்கே பயணிக்கிறோம் என தெரியாத பயணத்தை திமுக ஒருமுகப்படுத்தி ஒரு பாதை அமைத்தது. அடுத்த பிரச்சனை எந்த எந்த தொகுதி என பிரிப்பது தான். அது காங்கிரஸ் தவிர மற்றவர்களுக்கு சுலபம் தான் எனினும் காங்கிரஸ் போலவே திமுகவும் நகம் கடிக்க தொடங்கியது. ஏனனில் எல்லோருக்கும் நன்றாக தெரியும். காங்கிரசின் கோஷ்டி பிரச்சனைகள். அது நடந்து கொண்டு இருக்கும் போதே அந்த பக்கம் அதிமுக அடுத்த அடுத்த கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய சூழலுக்கு ஆளானது.

இதனிடையே திமுக தன் கட்சி வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கும் பணியும் சளைக்காமல் நடந்து கொண்டு இருந்தது. அதே வேளையில் திமுக தலைவரின் மனைவியும் மகளும் கூட கலைஞர் டிவியின் காரணமாக விசாரிக்கப்பட்டு கொண்டு இருந்தனர். பத்திரிக்கைகளுக்கு கேட்கவா வேண்டும்? இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவே தேர்தல் அறிக்கையும் தயாராகிக்கொண்டு இருந்தது. பின்னர் திமுக, பாமக, விசி, கொமுக என கூட்டணிக்கட்சிகள் தங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவிக்க தொடங்கினர். அது போல திமுகவும் அறிவித்தது. வேதைம், கடலூர் போன்ற ஒரு சில தொகுதிகள் தவிர வேறு எங்கேயும் எந்த பிரச்சனையும் இல்லை. மார்ச் 19ம் தேதி தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. மக்களுக்கு உண்மையாக என்ன தேவை என்பதோடு கவர்சியாக என்ன தேவை என்பதும் அதிலே சொல்லப்பட்டது. அதிலே மற்ற கட்சிகள் கவனிக்க தவறிய ஒரு விஷயமும் இருந்தது. அதை இந்த பதிவின் கடைசியில் சொல்கிறேன்.

அதன் பின்னர் இரு நாட்களுக்கு அறிவாலயத்தில் நடந்தது எல்லாமே வியூகம் அமைக்கும் பணி தான். கிட்ட தட்ட இந்த தேர்தலில் கதாநாயகன், கதாநாயகி, பிரச்சார பீரங்கி புண்ணாக்கு புடலங்காய் என எல்லாவற்றையும் விட அந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடந்த அந்த 3 நாட்களில் ந டந்த தேர்தல் போரின் வியூகம் தான் என்னை கேட்டால் இந்த தேர்தலில் திமுக வெற்றிக்கான கதாநாயகன். ஆமாம்.

கலைஞர்,பேராசிரியர், தளபதி, அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி, நட்சத்திர பேச்சாளர்களாக நடிகர் பாக்கியராஜ், நடிகை குஷ்பூ, குமரிமுத்து, வாகைசந்திரசேகர், நெப்போலியன் ஆகியோர் என முதலில் முடிவானது. பின்னர் திண்டுக்கல் லியோனியிடம் கேட்கப்பட்டு அவரும் ஒத்துக்கொண்டார். பின்னர் நடந்த விவாதத்தில் யார் யார் எந்த எந்த ஆயுதம் ஏந்துவது என விவாதிக்கப்பட்டது.அதாவது எப்படி பேச வேண்டும் என்பது தான் ஆயுதம். தேர்கள், சாரதிகள் தயாரானது. தவிர எந்த எந்த திசையில் யார் யாருக்கு செல்வாக்கு என பிரிக்கப்பட்டது. அதன்படி தயாநிதி முதலில் சென்னை முழுமைக்கும், பின்னர் கோவைப்பகுதி எனவும், கனிமொழி விருதுநகர் , நெல்லை, குமரி எனவும், பேராசிரியர் உடல் நிலை கருத்தில் கொண்டும் அவருடைய வில்லிவாக்கம் தொகுதியையும் (முன்னர் போல சின்ன தொகுதி இல்லை இப்போது) பார்க்க வேண்டியும் இருப்பதால் அவரை சில தொகுதிகளில் மட்டும் வைத்து கூட்டம் மட்டும் நடத்துவது என்றும் அன்றைய தினமே அவரை கொண்டு வந்து தலைநகரில் சேர்த்து விடுவது என்றும், தளபதி தன் தொகுதி தலைநகரில் இருப்பதால் காலை 5.30 முதல் காலை 10 மணி வரை தினமும் அங்கே பிரச்சாரம் பின்னர் சென்னை விமானநிலையத்தில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, திருவனந்தபுரம் என போய் அந்த அந்த மண்டலங்களுக்கு வேன் மூலமாக பிரச்சாரம் எனவும் இரவு கண்டிப்பாக தலைநகருக்கு திரும்பி வந்து விட வேண்டும் என்றும் முடிவானது. பாக்யராஜ் கொங்கு மண்டலத்தில் வேன் மூலமும், குமரி முத்து நாகர்கோவில் மண்டலத்திலும், நெப்போலியன், வாகை சந்திரசேகர் போன்றவர்கள் ஒரு வழி அமைத்தும் வியூகம் அமைக்கப்பட்டது.

கூட்டனி கட்சிகள் விடுதலை சிறுத்தைகள், பாமக, காங்கிரஸ், திராவிடர் கழகம், சுபவீ அய்யா ஆகியோரும் தனித்தனியாக சுழன்றனர்.

இதில் அழகிரியோ தன் மதுரை மண்டலம் தென் மண்டலத்தை முழுமையாக பார்த்து கொள்வதாக கூறினாலும் அங்கே கொமுகவுக்கோ, விசி, பாமகவுக்கோ அத்தனை செல்வாக்கு இல்லை என்பதாலும் காங்கிரசை மட்டுமே அவர் கூட்டணியாக நம்பி இருந்ததாலும் தவிர அந்த பகுதி தேமுதிக தலைவர் விசயகாந்து சொந்த தொகுதி அதனால் கொஞ்சம் வாக்குகள் அவர் கட்சிக்கு அங்கே அதிகம் என்பதாலும் கிட்ட தட்ட அவர் வியூகத்தில் தொங்கலில் விடப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். அப்போது தான் அவர் வடிவேலுவை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்தார். (அதை பின்னர் விரிவாக பார்ப்போம்)

இதில் கிட்ட தட்ட எல்லோருமே அதாவது கலைஞர், தளபதி தவிர யாரும் ஜெ, மற்றும் அதிமுகவை பற்றி விமர்சிக்காமல் தாங்கள் செய்த நன்மைகள், செய்ய போகும் நன்மைகள் அதாவது தேர்தல் அறிக்கை மட்டுமே பிரச்சாரம் அதாவது பாசிட்டிவ் அப்ரோச் மட்டுமே இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அது போல அதிமுக அணியினர் மூலமாக வரும் தொல்லைகளை உடனுக்குடன் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க பொன் முத்துராமலிங்கம் தலைமையில் ஒரு குழு. பாவம் அது ஒரு கட்டத்தில் தேர்தல் கமிஷன் மேலேயே குற்றம் சாட்டி நீதிமன்றம் சென்ற சம்பவமும் நடந்ததது என்பது சோகம்.

இப்படியாக வியூகம் அமைக்கப்பட்டு கலைஞரின் முதல் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் திருவாரூரில் நடக்கும் வரை ஒரு திட்டமிட்ட பாதையில் தான் திமுக மெதுவாக அடியெடுத்து வைக்க தொடங்கியது. அங்கே வடிவேல் பேசிய கன்னிப்பேச்சு அதிரடியாக இப்படி ஒரு மாற்றம் கொண்டுவரும் என யாரும் அத்தனை ஏன் கூட்டணி கட்சி தலைவர்கள் டாக்டர் அய்யா, திருமா உட்பட யாரும் விசயகாந்தை அதுவரை விமர்சிக்காமல் இருந்த போதும் இவர் தனது அதிரடியால் ஒரே ஒரு கன்னிப்பேச்சால் அந்த மேடையில் இருந்தவர்களை விட அந்த பேச்சை கேட்க விசயகாந்தை அதிகம் அதிர்சியடைய செய்து இருக்க வேண்டும். அன்றைக்கு அடுத்த நாள் தான் விசயகாந்து ஒரு மலிங்கா போல சீண்டி விட்டால் சின்னாபின்னமாகும் ஒரு தண்ணி பாம்பு என்று மற்ற தலைவர்களுக்கு புரிந்து போனது.

அடுத்த நாள் முதல் விசயகாந்தின் குடி, குடித்துவிட்டு தனது வேட்பாளரையே அடி, கூட்டணி கட்சி கொடிகளை இரக்க சொல்லி மிரட்டியது, பொதுவாகவே கொடியை இரக்கு என சொன்னால் அது அசம்பாவிதம் என நினைப்பவன் தொண்டன். தன் தலைமைக்கு ஒரு கேடு வந்தால் மட்டுமே கொடி இரக்கப்படும். அப்படி எல்லாம் விசயகாந்து அடித்த ரகளையால் வடிவேலுவை மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுக்க பயன்படுத்திக்கொள்ள வியூகம் மாற்றி அமைக்கப்பட்டது.

இதனிடையே அந்த பக்கம் அதிமுக தன் பங்குக்கு எல்லாமே திமுகவுக்கு சாதகமாக செய்தது. சாதிக்பாட்ஷா தற்கொலை அன்றைக்கு அதை பூதாகரமாக்கி இருக்க வேண்டிய அதிமுக தன்னிச்சையாக கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிக்கும் சேர்த்து பட்டியல் வெளியிட்டு சாதிக் பாட்ஷா தற்கொலையை நீர்த்து போக வைத்தது. தன் அணிக்கு எதிராக 3 வது அணி அமைக்கும் விதையை அதுவே போட்டு தண்ணீர் ஊற்றியது. மதிமுகவை கழட்டி விட்டது. அதனால் மதிமுக மீது நடுநிலையாளர்கள் பார்வையும் அனுதாபமும் அதிகரித்தது. அபசகுணமாக இரண்டாவது பட்டியல் வெளியிட நேர்ந்தது. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் அதிமுக இருந்தும் அதை சரியாக செய்ய இருந்த வைகோவை அதிமுக இழந்தது. அதை கொண்டு பட்டி தொட்டியில் சேர்க்கும் வல்லமை படைத்த நாஞ்சில் சம்பத் பாவம் பட்டிமன்றத்தில் நடுநிலை நீதிபதியாகிப்போனார். (ஆனால் இங்கே பட்டிமன்ற நடுவர் லியோனி திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு சென்று கொண்டு இருந்தார்) ஆனால் அந்த பணியை செய்ய தெரிந்த இந்திய கம்யூனிஸ்ட் தா. பாண்டியனை மக்கள் அதிமுக கிளைக்கழக பிரதிநிதியாக மட்டுமே பார்த்து வருவதால் அதுவும் பயன்படவில்லை. ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரச்சாரம் மக்களிடம் அத்தனை பெரிய வரவேற்பை பெறவில்லை. தவிர நெப்போலியன் போன்றவர்கள் தங்கள் செய்த நிறைவேற்றிய திட்டங்களை சர்வர் சுந்தரம் நாகேஷ் பாணியில் வரிசையாக 8 நிமிடம் அடுக்கி கொண்டே போய் மூச்சு வாங்கி நிற்கிறார். ஆனால் விசயகாந்தும் மூச்சு வாங்கி தள்ளாடி நிற்கிறார். இந்த இரண்டு மூச்சு வாங்கலுக்கும் மக்களுக்கு வித்யாசம் புரிந்து போனது. அந்த பக்கம் சீமான் பிரச்சாரம் இருந்தாலும் அது திமுகவை பெரிதும் பாதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் ராகுலுக்கு நெருக்கமான கரூர் ஜோதிமணி "அண்ணா என் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டாம் " என கெஞ்சலாக கடிதம் அனுப்பியது போன்ற சில கேவலமான சம்பவங்கள் தவிர்த்து வேறு எதும் பாதிப்பு திமுக அணிக்கு இல்லை.

விசயகாந்து "ஞாயிறை" பார்த்து சனி என்கிறார். சுற்றி சுழலும் புயலை பார்த்து பிணி என்கிறார். ஆனால் தான் தொண்டை வலி என பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கின்றார். மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்தனர். ஜெயலலிதாவோ அட்டையில் வைத்து படிக்கிறார். இங்கே வடிவேலுவோ கருத்தை உள்வாங்கி கொண்டு அவர் பாணியில் நடிக்கிறார், பாடுகிறார், குழந்தைகள் பெண்கள் எல்லாம் சிரிக்கும் அளவு சிரிக்க வைத்து தேர்தல் அறிக்கையை கொண்டு போய் சேர்க்கின்றார். பாக்கியராஜ் குட்டி கதைகள் சொல்லி தேர்தல் அறிக்கையை மக்கள் மனதில் பதிய வைக்கின்றார். குமரி முத்து அரசியல் ஒப்பீடு செய்து பேசுகின்றார். நெப்போலியன் மக்களை கவரும் விதத்தில் பேசுகின்றார். குஷ்பூ பெண்கள் கூட்டத்தை கூட்டுகின்றார். அங்கே ஜெயலலிதாவை தவிர யாரும் பிரச்சாரத்துக்கு இல்லை. இல்லவே இல்லை. அது தேவையும் அங்கு இல்லை என்கிற அளவில் முந்தைய ஆட்சியில் நன்மை எதும் செய்திருக்கவும் இல்லை.

பதிவின் ஆரம்பத்தில் சொன்னதை இப்போது விளக்குகின்றேன். இந்த தேர்தல் அறிக்கையில் மிக்சி அல்லது கிரண்டர் என்பது கவர்சி திட்டம் இல்லை. ஏனனில் அது 1500 முதல் 2000 வரை தான் செலவாகும். ஆனால் மகளிர் சுய உதவி குழுக்கள் தமிழகத்தில் பரவலாக ஓட்டு போடும் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒரு குழுவுக்கு 20 பேர். ஒரு குழுவுக்கு 2 லட்சம் அதாவது 10000 ரூபாய் கடன் குறைந்த வட்டியில் கொடுக்கப்படுகின்றது தொழில் தொடங்க. ஆனால் இப்போது அது 4 லட்சம் ரூபாய். அதிலே 2 லட்சம் மானியம். அதாவது ஒரு மகளிருக்கு 20000 ருபாய் அதிலே பத்தாயிரம் ரூபாய் மானியம். இதன் ரீச் அதாவது நீங்கள் யாரும் கணிக்க முடியாத அளவுக்கு இருக்கப்போகின்றது என்பது சர்வ நிச்சயம்.

அதிமுக பக்கம் மீடியா பரப்புரை என்று பார்த்தால் ஜெயா டிவி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், ரிப்போர்டர், தினமலர், தினமணி என்று பலமாக இருந்தாலும் திமுக அணியில் சன் டிவி, கலைஞர் டிவி, தினகரன் என்ற அளவிலேயே இருக்கின்றது. ஆனாலும் சமாளித்து வருகின்றது திமுக அணி.

அது போல கட்சிகள் சதவீதம் என்று ஒரு புரூடா கணக்கு எப்போது எல்லோரும் போடுவார்களே, அதில் திமுக அணியில் திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள்,கொமுக, காங்கிரஸ் மூமுக, மு.லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், நாடார் பேரவை, கார்த்திக் கட்சி:-)) , மற்றும் மதிமுகவின் தொண்டர்களின் வாக்கு இருக்கின்றது. கொமுகவினால் திமுக அணிக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு: ஆமாம், ஆனால் அதே நேரம் கொமுக அதிமுக பக்கம் சேர்ந்து இருந்தால் மிகப்பெரிய பாதிப்பு வந்திருக்கும் திமுக அணிக்கு. அது இப்போது தவிர்க்கப்பட்டுள்ளது.

அங்கே அதிமுக, இரு கம்யூனிஸ்டுகள் மட்டுமே.தவிர சேதுராமன் கட்சி, தவிர மிகப்பெரிய பலம் கமிஷன். தேமுதிகவுக்கான வாக்கு வங்கி முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்பது கண்கூடு. அவர்களுக்கு இருந்த 9 சத வாக்கு வங்கியில் நடுநிலையாளர்கள் 6 சதம் அப்படியே போய்விட்டது. மீதி இருகும் 3 சத விசயகாந்து ரசிகர்களால் அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்குமா என்பதே சந்தேகம். அதே போல தேமுதிக வுக்கு அதிமுக தொண்டர்கள் ஓட்டு போடுவார்கள் என்று நம்புவதும் தவறானதாகும்.

ஆக எல்லா சாதக பாதகங்களையும் வைத்து ஆராயும் போது, நாங்கள் வெற்றிக்கோட்டை தொட்டு விட்டோம். நான் களப்பணியில் ஒரு மூன்று தொகுதிகளை மட்டுமே பார்த்தேன் என்பதால் என் ஒட்டு மொத்த கணிப்பை சொல்ல முடியாது என்கிற போதும் சில ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் வெறும் 300 பேரை மட்டும் பார்த்துவிட்டு 150 தொகுதிகள் அதிமுக வெல்லும் என சொல்லும் போது நான் கடந்த ஒரு மாதமாக படித்ததை, கேட்டதை, பார்த்ததை வைத்து ஏன் என் கணிப்பை சொல்ல கூடாது? அதனால் சொல்கிறேன். திமுக தனியாக 100 முதல் 110 தொகுதி வரை வெல்லும். இந்த கணிப்பு சிலருக்கு எரிச்சலூட்டலாம். அவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.ஒரு பூரணம் என்று சொல்வார்களே, ஒரு முழுமை என்று சொல்வார்களே, ஒரு பௌர்ணமி என்று சொல்வார்களே, அது போல ஒரு ஒரு நிலையில் இருக்கின்றோம் இப்போது. தேர்வு நன்றாக எழுதி முடித்த மாணவனின் மனநிலையில் இருக்கின்றோம். மனது நிறைவாக இருக்கின்றது.

வெல்க திமுக! வெல்க திமுக! வெல்க திமுக!